Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ராஜபாளையம் அருகே சிங்கம் நடமாடுவதாக போலி வீடியோ வைரல்: வனத்துறை கடும் எச்சரிக்கை

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே, சிங்கம் நடமாடுவதாக போலி வீடியோ வெளியிட்டவர்களுக்கு வனத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே, சங்கரன்கோவில் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் சிங்கம் உலா வந்ததாக சமூக வலைதளங்களில் நேற்று வீடியோ வைரலானது. அந்த வீடியோவின் கீழ், ‘‘தென்மலையில் இருந்து முக்குரோடு மார்க்கமாக ராஜபாளையம், சங்கரன்கோவில் செல்பவர்கள் அல்லது அங்கிருந்து திரும்புவோருக்கு தகவல் சொல்லவும். சிங்கம் ஒன்று வழி தவறி வந்துள்ளது. அதை வனத்துறை பிடிக்கும் வரை சற்று பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் பயணம் செய்யவும்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை பார்த்து பீதியடைந்த பொதுமக்கள் மற்றவர்களுக்கு வீடியோவை அனுப்பி வைரலாக்கினர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும், இந்த காட்சிகள் தென்காசியில் எடுக்கப்பட்டது என்றும் தகவல் வைரலானது. இதுகுறித்து வனத்துறையிடம் விசாரித்தபோது, ‘வீடியோவில் வரும் விளம்பர பலகைகளில் வடமொழி எழுத்துக்கள் உள்ளன. எனவே, அது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது இல்லை. மேலும், நமது வனப்பகுதியில் சிங்கங்கள் இல்லை. பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். இதுபோன்ற போலி வீடியோக்கள் பகிர்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரித்தனர்.