புதுடெல்லி: சிறப்பு ரயில்களுக்கான கட்டண அமைப்பு, கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான அளவுகோல்கள், கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பு ரயிலிலிருந்து வழக்கமான சேவையாக மாற்றப்பட்ட ரயில்களின் எண்ணிக்கை, ஹனுமன்கர்-ஜெய்ப்பூர் ரயிலின் கட்டணம் அதே வழித்தடத்தில் இயங்கும் மற்ற வழக்கமான ரயில்களை விட அதிகமாக உள்ளதா என காங்கிரஸ் எம்பி சஞ்சனா யாதவ் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று அளித்த பதிலில், ‘‘நெரிசல் மிகுந்த காலங்கள், பண்டிகைகள், சிறப்பு நிகழ்வுகளின் போது பயணிகளின் கூடுதல் கூட்டத்தை சமாளிக்க, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வணிக ரீதியான அவசியம், செயல்பாட்டு சாத்தியக்கூறு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அவற்றை வழக்கமான சேவைகளாக மாற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் ஹனுமன்கர்-ஜெய்ப்பூர் ரயில் உட்பட 245 சிறப்பு ரயில்கள் வழக்கமான சேவைகளாக மாற்றப்பட்டுள்ளது. அதே சமயம், முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயங்கும் ரயில்களை விட அதிக கட்டணத்தில் இயக்கப்படுகின்றன’’ என்றார்.


