*மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகரில் கூடுதலாக 8 இடங்களில் பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட உள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்துநகர் கடற்கரை பூங்கா, ரோச் பூங்கா மற்றும் ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் ஆகிய 3 இடங்களில் கூடுதலாக பொது சுகாதார வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
முத்து நகர் கடற்கரை பூங்காவில் கட்டப்பட்டு வரும் பொது சுகாதார வளாக பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து முத்துநகர் கடற்கரை பூங்கா, பழைய பஸ் நிலையமான ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம், ரோச் பூங்கா ஆகியவற்றில் சுகாதார வளாகப் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என ஒவ்வொருவருக்கும் தனியாக கழிவறை வசதி ஏற்படுத்தப்படுகிறது.
இதுதவிர கூடுதலாக சத்யா நகர், கருணாநிதி நகர், எம்ஜிஆர் நகர், சூசைநகர், ராஜாஜி பூங்கா, அய்யாசாமி காலனி, லேபர் காலனி உள்ளிட்ட 8 இடங்களில் புதிதாக பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட உள்ளது, என்றார்.
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் மதுபாலன், திமுக பகுதி செயலாளர் சுரேஷ் குமார், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் இர்வின் ஜெபராஜ், இளநிலை பொறியாளர் பாண்டி, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
