தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு திமுக தலைமையிலான கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் தான் போட்டி என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என பலதரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை மற்றும் விடியல் பயணம் போன்ற முன்னோடி திட்டங்கள், மற்ற மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளால் ஈர்க்கப்பட்டு முன்மாதிரியாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்கள் கல்வி, பெண்கள் மேம்பாடு மற்றும் சமூக நலனை அடிப்படையாக கொண்டு, இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பாராட்டை பெற்றுள்ளன. அதிலும் காலை உணவு திட்டம், கல்வியில் இடைநிற்றலை தவிர்த்து, ஊட்டச்சத்தை அதிகரிக்க செய்யும் ஒரு முன்னோடி திட்டமாகும்.
அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், அவர்களின் mobility-ஐ அதிகரித்து, பொருளாதாரத்தில் பங்களிக்க ஊக்குவிக்கிறது. அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கும் திட்டம், பெண் கல்வியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இளைஞர்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுகிறது. தமிழ்நாட்டின் புதுமையான மற்றும் சமூக நலன் சார்ந்த திட்டங்களை, பிற மாநில அரசு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு, தங்களின் மாநிலங்களிலும் அதேபோன்ற திட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, கல்வி மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் சார்ந்த திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
தலைமை பொறுப்பில் உள்ளோருக்கு பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, காலம் நேரம் பாராது உழைத்திடும் பண்பு, தீர்க்கமாக முடிவெடுக்கும் திறன், எதையும் தாங்கும் வல்லமை போன்ற பண்புகள் நிச்சயம் தேவை என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த 5 ஆண்டில் ஒன்றிய அரசின் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே மக்கள் நலம் சார்ந்த திட்டங்களை அறிவித்து பாராட்டை பெற்றுள்ளார். மேலும் வளர்ச்சியில் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தொழில் துறை உள்பட பல்வேறு துறைகளில் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. திமுக தலைமையில் அமைந்த கூட்டணி, மதச்சார்பற்ற ஒத்த கொள்கையுடன் திகழ்கிறது.
திமுக அரசின் திட்டங்கள், சிறப்பாக உள்ளது எனக் கூறி இக்கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர்ந்து வலுவான கூட்டணியாக தேர்தலை சந்திக்கிறது. ஆனால் அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணி, தேர்தலுக்கு மட்டும் தான் கூட்டணி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. இக்கூட்டணி கொள்கை இல்லாமல் முரண்பாடான கூட்டணி என்பதை காட்டுகிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இரட்டை இலக்கு எண்ணில் பாஜ வெற்றி பெற துடிக்கிறது. தமிழ்நாட்டில் இச்சம்பவம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. இங்கு மதத்தையும் கடந்து மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இந்த தேர்தலில் பொய்யுரைகளை கூறி தான் அதிமுக கூட்டணி வாக்கு கேட்க முடியும். மக்கள் நலம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்திய அரசை, வாக்காளர்கள் மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைப்பார்கள் என்பது உறுதி.
