வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமிப்பதற்கான மாற்றியமைக்கப்பட்ட அறிவுறுத்தல்: இந்திய தேர்தல் ஆணையம் வெளியீடு
சென்னை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கை: பொதுவாக, வாக்காளர் பட்டியலின் குறிப்பிட்ட பாகத்தில் பெயர் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் ஒரு வாக்குச்சாவடி நிலை முகவராக இருப்பார். இப்போது, வாக்காளர் பட்டியலின் குறிப்பிட்ட பாகத்தில் பெயர் பதிவு செய்த வாக்குச்சாவடி நிலை முகவர் கிடைக்காத பட்சத்தில், அதே சட்டமன்றத் தொகுதியில் பெயர் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு வாக்காளரும் வாக்குச்சாவடி நிலை முகவராக நியமிக்கப்படலாம். அவ்வாறு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர் தனது நியமிக்கப்பட்ட பகுதியின் வரைவு வாக்காளர் பட்டியலில், இறந்த அல்லது இடம் பெயர்ந்த வாக்காளர்களின் பதிவுகளை அடையாளம் காணும் பொருட்டு, ஆய்வு செய்வதற்கு முற்படுவர். தமிழ்நாட்டில், 211445 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
