பல்லடம்: தமிழகத்தில் இதுவரை எந்த அரசியல் கட்சியும் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை என பல்லடத்தில் பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறினார். பல்லடத்தில் நேற்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: விவசாயிகளின் கள் இறக்க போராட்டத்திற்கு பாஜக எப்போதும் ஆதரவு தெரிவிக்கிறது. கள் என்பது ஓர் உணவு என்பதை ஏற்கிறோம். கள் மீதான தடையை அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. சீமான் மரம் ஏறி கள் இறக்கி அருந்துகிறார் என்றால் அது அவரது ஸ்டைல். அவரும் அரசு பதவிக்கு வந்து சட்டத்தை கையாள வேண்டும்.
எனவே சட்டப்படி கள் மீதான தடையை முற்றிலும் நீக்க வேண்டும். தவெகவை பொறுத்த வரை மத்தியில் பாஜ, தமிழகத்தில் திமுக தான் எதிரி என்று அறிவித்து அவர்கள் கொள்கைப்படி அரசியல் நடத்துகின்றனர். அது போல் தேர்தல் நெருங்கும் போது எல்லா அரசியல் கட்சியும் தங்கள் கொள்கைகளை தெளிவுபடுத்துவார்கள். தமிழக அரசியல் களத்தை பொறுத்த வரை பாமக, தேமுதிக, தவெக என எந்த அரசியல் கட்சியும் கூட்டணி குறித்து முடிவு செய்து கூட்டணி முழுமை அடையவில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


