புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை இடிப்பார்கள் என பொய்யான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் மீது மோடி வைக்கிறார். அவதார புருஷன் எனக்கூறி உளறி வருகிறார். இந்த தேர்தலில் 400 இடங்களில் பாஜ கூட்டணி வெற்றி பெறும் என மோடி கூறி வருவது, எடுபடாது. 300 இடங்களுக்கு மேல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். தமிழக ஆளுநர் ரவி சர்ச்சைக்குரிய கருத்துகளை மக்களிடையே பேசி வருகிறார்.
ஜனநாயக மீறல் குறித்து உச்சநீதிமன்றம் அவரை சாடிய போதும், அவர் இன்னும் திருந்தவில்லை. தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜ வெற்றி பெறாது. அதே போல் அதிமுகவும் படுதோல்வி அடையும். ஆளுநர் ரவி, திருவள்ளுவர் படத்திற்கு காவி உடையை அணிவித்து தன்னை சங்கி என்று நிரூபித்துள்ளார். அவருக்கு தூண்டுதலாக இருப்பது அமித்ஷா மற்றும் மோடியும் தான். இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் காலம் விரைவில் வந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
