மதுரை: மதுரையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மனித நேய மக்கள் கட்சியின் பேரணி மற்றும் மாநாடு ஜூலை 6ல் மதுரையில் நடக்கிறது. இஸ்லாமிய மக்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என ஜவஹர்லால் நேரு கூறினார். ஆனால், இஸ்லாமிய மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. பாசிசத்தை எதிர்க்க கூடிய திமுக கூட்டணியில், நாங்கள் எந்தவொரு சலனமுமின்றி தொடர்ந்து பயணித்து வருகிறோம். நடிகர் விஜய் தற்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார், காலப்போக்கில்தான் அவருடைய நிலைப்பாடு தெரியும், விஜய் தனது வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியவரை, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்துள்ளார். அவர் மீது தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். எடுப்பார் கைப்பிள்ளை போல செயல்பட்டு வருகிறார். தவெகவில் நடைபெறும் சம்பவங்களை பார்த்தால், நடிகர் விஜய்யை பாஜ இயக்கி வருகிறது என தெள்ளத் தெளிவாகிறது. திமுக ஆட்சி குறித்து பேச பாஜவிற்கோ, அமித்ஷாவிற்கோ தகுதியில்லை. ஒன்றிய அரசு அறிவித்த திட்டங்களை முழுமையாக நிறைவேற்றவில்லை. இவ்வாறு கூறினார்.


