Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திமுகவின் 8வது மண்டல பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நியமனம்: தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க துணை முதல்வரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு திமுக சார்பில் அமைக்கப்பட்டன. இந்த குழுவினர் மூலம் மாவட்ட வாரியாக அனைத்து அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தியது. இதனையடுத்து இக்குழுவின் பரிந்துரையின் படி மண்டல அளவில் தேர்தல் பணிகளை விரைவுப்படுத்த சமீபத்தில் 7 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்துக்கு அமைச்சர் கே.என்.நேருவும், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.யும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆ.ராசா எம்.பி.யும் நியமிக்கப்பட்டனர்.

அதேபோல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் மற்றும் வட மாவட்டங்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு நியமிக்கப்பட்டனர். மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு அமைச்சர் சக்கரபாணியும், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியாக இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், திமுகவின் 8வது மண்டல பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை தலைமைக் கழகம் நியமித்துள்ளது. அவர் கடலூர் கிழக்கு, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது.