ஒரு அண்ணாமலை அல்ல, ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் தொடரும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
சென்னை: ஒரு அண்ணாமலை அல்ல, ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் தொடர்ந்து நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னையில் இயங்கி வரும் பல்வேறு அரசு நூலகங்களை மேம்படுத்தி, பகிர்ந்த பணியிடம் மற்றும் கல்வி மையம் அமைப்பதற்காக களஆய்வு மற்றும் நடைபெற்று வரும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். திரு.வி.க. நகர் தொகுதி, மண்டலம்-6, வார்டு-71, பெரம்பூர் பேருந்து நிலையம் அருகில் நெல்வயல் சாலையில் உள்ள கிளை நூலகம் உள்ளிட்ட இடங்களை அவர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதவாது: வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. முதல் கட்டமாக, தற்போது 6000 கோடி ரூபாய்க்கு மேலாக இத் திட்டத்திற்கு முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாக இன்னும் இரண்டு தினத்தில் இத் திட்டங்களை முதல்வர் தொடங்க உள்ளார். 15க்கும் மேற்பட்ட கிளை நூலகங்களை மேம்படுத்தும் பணிக்கும், பழுதடைந்த பழைய நூலகங்களை அகற்றி புதிதாக கட்டுவதற்கும் ஆணையிட்டுள்ளார். மேலும், அண்ணாமலை ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி. எங்களுக்கு பட்டறிவும் உள்ளது, படிப்பறிவும் உள்ளது. துணை முதலமைச்சரின் அரசியல் பங்களிப்பு என்பது நடுத்தர மக்கள், பாமர மக்கள், நடுநிலையாளர்கள் என அனைவரும் துணை முதலமைச்சரை போற்றுகிறார்கள்.
மழை வருவதற்கு முன்பே ஆய்வு செய்தும், மக்களின் தேவைக்கு ஏற்ப திட்டங்களை கொண்டு வருவதும், அடிதட்டு மக்களின் நலனுக்காக உழைத்துக் கொண்டே வருகிறார் துணை முதல்வர். ஒரு அண்ணாமலை அல்ல, ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மண்டல குழு தலைவர் சரிதா, மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


