Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவல் துறை சார்பில் ரூ.75.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், திறன்மிகு வகுப்பறைகள் ஆகியவற்றை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (4.3.2026) தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் 75 கோடியே 80 இலட்சத்து 17 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 200 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், 8 காவல்துறை இதர கட்டடங்கள், ரூ.15 கோடி செலவில் 22 காவல் பயிற்சி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு வகுப்பறைகளை திறந்து வைத்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 2,138 அடுக்குமாடி குடியிருப்புகளை காவல்துறைக்கு வழங்கினார்.

மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றிவரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் கட்டுதல், “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல், பாதுகாப்பு பணிகளுக்காக சுற்றுக்காவல் வாகனங்களை கொள்முதல் செய்தல், காவல்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் இந்த ஐந்தாண்டுகளில் காவல்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் 622.16 கோடி ரூபாய் செலவில் 3,597 காவலர் குடியிருப்புகள், 79.16 கோடி ரூபாய் செலவில் 58 காவல் நிலையக் கட்டடங்கள், 219.76 கோடி ரூபாய் செலவில் 37 காவல்துறை இதர கட்டடங்கள் மற்றும் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் 55.19 கோடி ரூபாய் செலவில் 253 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன.

காவல்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தல்

கோயம்புத்தூர் மாவட்டம் – சிங்காநல்லூரில் 31 கோடியே 22 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 100 காவலர் / தலைமைக் காவலர் குடியிருப்புகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் – பிரையண்ட் நகரில் 31 கோடியே 29 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 100 காவலர் / தலைமைக் காவலர் குடியிருப்புகள்;

காஞ்சிபுரம் மாவட்டம் – விஷ்ணுகாஞ்சியில் 1 கோடியே 62 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் – சோழவரத்தில் 1 கோடியே 2 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள செங்குன்றம் போக்குவரத்து காவல் நிலையம்;

சென்னை மாவட்டம் – கொண்டித்தோப்பில் 3 கோடியே 31 இலட்சத்து 81 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர்களின் குழந்தைகளை கல்வி மற்றும் விளையாட்டில் வழிநடத்த உடற்பயிற்சிக்கூடம், நூலகம் மற்றும் கல்வி மையம்;

சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், மருதம் வளாகத்தில் 1 கோடியே 11 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையின் புதிய கட்டுப்பாட்டு அறைக் கட்டடம்;

சென்னை – தண்டையார்பேட்டை, மதுரை மாவட்டம் – மதுரை குதிரை இலாய வளாகம், சேலம் மாவட்டம் – லைன்மேடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – திருச்சிராப்பள்ளி ஆயுதப்படை வளாகம் ஆகிய இடங்களில் தலா ஒரு கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் அங்காடிகள்;

திருவள்ளூர் மாவட்டம் – சோழவரத்தில் 1 கோடியே 11 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள செங்குன்றம் காவல் உதவி ஆணையர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு; கரூரில் 1 கோடியே 09 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள க்யூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை கட்டடம்; என மொத்தம் 75 கோடியே 80 இலட்சத்து 17 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல்துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

காவல் பயிற்சி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு வகுப்பறைகளை திறந்து வைத்தல்;

காவல்துறை பயிற்சியை நவீனமயமாக்குவதில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பாகவும், கற்றல் அமைப்பை மேம்படுத்த பல்வேறு கருவிகளை ஒருங்கிணைத்து இணையவழிக் குற்றங்கள், தடயவியல் அறிவியல், சட்ட நடைமுறைகள், மக்கள் கூட்டநெரிசல் கட்டுப்பாடு, போக்குவரத்து மேலாண்மை, பேரிடர் மீட்பு மற்றும் சமூக காவல் ஆகியவற்றை எளிதாக கையாள 1,24,000 காவலர்கள், மற்றும் காவல் அதிகாரிகளின் பயிற்சிக்கு பயன்படும் வகையில் 15 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம், சென்னையில் 5 திறன்மிகு வகுப்பறைகளும், வேலூர், கோயம்புத்தூர், திருவள்ளூர், விழுப்புரம், திருச்சி, சேலம், மதுரை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள நிரந்தர காவலர் பயிற்சி பள்ளிகள் மற்றும் பணியிடை பயிற்சி மையம் ஆகியவற்றில் 17 திறன்மிகு வகுப்பறைகள் என மொத்தம் 22 திறன்மிகு வகுப்பறைகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை காவல் துறையினரின் பயன்பாட்டிற்கு வழங்குதல்;

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு சென்னை - சோழிங்கநல்லூர், அம்பத்தூர் மற்றும் மகாகவி பாரதியார் நகர் ஆகிய இடங்களிலுள்ள 2,138 அடுக்குமாடி குடியிருப்புகளை காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் அடையாளமாக 5 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாடகை குடியிருப்பிற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் (பொறுப்பு) ஜி.வெங்கடராமன், காவல்துறை தலைமை இயக்குநர் பயிற்சி முனைவர் சந்தீப் ராய் ராத்தோர் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வினித் தேவ் வான்கேடே, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆ. அருண், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.