பாடாலூர்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று 14ம் தேதி தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காவலர்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து வந்திருந்தனர். காவல் நிலைய நுழைவு வாயிலில் கரும்பு கட்டுகள் கட்டப்பட்டிருந்தது. வண்ண கோலமிடப்பட்டிருந்தது.
காவல் வளாகத்தில் காவலர்கள் மண் பானை வைத்து பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கிய போது பொங்கலோ.. பொங்கல் பொங்கலோ... பொங்கல் என்று சத்தமாக கூறி குதூகலத்துடன் சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடி மகிழந்தனர். விழாவிற்கு பெரம்பலூர் டிஎஸ்பி ஆரோக்கியராஜ் தலைமையில் காவலர்கள் மற்றும் அங்கு வந்திருந்த பொதுமக்களுக்கும் பொங்கல் வழங்கி ஒருவருக்கு ஒருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் இன்ஸ்பெக்டர் பிரபு, எஸ்ஐகள், காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.