வேலூர் அடுத்த பொய்கை சந்தையில் ரூ.85 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
வேலூர்: பொய்கை மாட்டுச்சந்தையில் இன்று ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சத்துக்கு விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் சந்தைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள், கோழிகள் என கால்நடைகள் குவிந்து சந்தை களைக்கட்டியது.
இந்த வாரம் சற்று கூடி, 1000க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இவற்றுடன் கால்நடைகள் உட்பட பிற கால்நடைகளுக்கு தேவைப்படும் பொருட்கள், காய்கறிகள் என அனைத்தும் சேர்ந்து வர்த்தகம் ரூ.85 லட்சம் வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் தீவனம் தட்டுப்பாடு இல்லை. இதனால் மாடுகள் வரத்து அதிகரித்து வருகிறது. விற்பனையும் ரூ.85 லட்சத்துக்கு நடந்தது. விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் மாடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்’ என்றனர்.