திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயில் பல நூற்றாண்டுகளை கடந்தும் இப்போதும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோயில் பண்டைய திராவிட, கேரள கலாச்சாரத்தின் படி கட்டப்பட்டுள்ளது. அனந்த சயனத்தில் உள்ள மூல விக்ரகத்தின் நீளம் 18 அடியாகும். இந்த விக்ரகம் 108 அரிய மூலிகைகள், கற்கள், எண்ணெய் வகைகளை சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இது கடுசர்க்கரை யோகம் என்று அழைக்கப்படுகிறது.
இதனால்தான் பல நூற்றாண்டுகள் ஆகியும் இந்த சிலை சேதமடையாமல் இருந்தது. இந்நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக மூல விக்ரகத்தில் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆய்வு நடத்த கோயில் தந்திரி சதீசன் நம்பூதிரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இக்குழு மூல விக்ரகத்தில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து ஆய்வு நடத்தி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் எந்தெந்த இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சீரமைப்பதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
