ரூ.5.24 கோடியில் பெரியார் நகர் நூலகம் மற்றும் முதல்வர் படைப்பகம் பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ரூ.3.86 கோடியில் புதிய கட்டிடம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை: சென்னை கொளத்தூர், பெரியார் நகர் நூலகம், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.5.24 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த முதல்வர் படைப்பகம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்தை கொண்ட குளிரூட்டப்பட்ட நவீன படைப்பகமாக அமைக்கப்பட்டுள்ளது.
தரைத்தளத்தில் 75 இருக்கைகளுடன் கூடிய நூலகம், முதல் தளத்தில் 85 இருக்கைகள் கொண்ட கற்றல் மையம் மற்றும் 60 இருக்கைகள் கொண்ட பயிற்சி கூடம் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 70,000 புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி, மின்வழி கற்றல், இலவச இணையதள இணைப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சிற்றுண்டியகம், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளும், மாணவர்கள், போட்டி தேர்வு ஆர்வலர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து பெரியமேடு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு ரூ.3.86 கோடி செலவில் 6,200 சதுரஅடி நிலப்பரப்பில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள பெரியமேடு சார்பதிவாளர் அலுவலகத்திற்கான புதிய கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார். மேலும், கீழ் கொளத்தூர், கார்த்திகேயன் சாலையில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பெரவள்ளூர் புற காவல் நிலையம் கட்டும் பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து ரூ.11.37 கோடி மதிப்பீட்டில், சிவ இளங்கோ சாலையில் கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் அலுவலகம் கட்டும் பணியை ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், எம்எல்ஏக்கள் இ.பரந்தாமன், வெற்றியழகன், தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ரங்கநாதன், வீட்டுவசதி துறை செயலாளர் காகர்லா உஷா, சென்னை மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
