Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

வேலூர் விமான நிலையத்தில் ரூ10 கோடியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி துவக்கம்: இந்த ஆண்டு இறுதிக்குள் விமான சேவை: அதிகாரிகள் தகவல்

வேலூர்: வேலூர் விமான நிலையத்தில் பாதுகாப்புக்காக கம்பி வேலியை அகற்றிவிட்டு, ரூ10 கோடியில் கற்களால் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் விமான சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் 2017ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக ரூ65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2018ம் ஆண்டு பணிகள் தொடங்கி முடிந்துள்ளது. முதற்கட்டமாக 20 இருக்கைகள் கொண்ட சிறிய விமானங்களை சென்னை, பெங்களூரு, திருப்பதி, திருவனந்தபுரம் நகரங்களுக்கு இயக்க விமான போக்குவரத்து துறை முடிவு செய்தது. தொடர்ந்து விமான நிலையத்தை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, வேலூர் விமான நிலையத்தில், 850 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளப்பாதை தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான முனையம், சரக்கு முனையம், தகவல் கட்டுப்பாட்டு அறை, ரேடார் கருவி, சிக்னல் கோபுரம், நிலைய அலுவலகம், பயணிகள் காத்திருக்கும் அறைகள் உள்ளிட்ட பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், விமானங்களை இயக்குவதற்கான சிக்னல் பரிமாற்றம் குறித்து சோதனைகள் நடந்தது. இதையடுத்து, விமான போக்குவரத்து பாதுகாப்புத்துறை தென்மண்டல துணை பொதுமேலாளர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் வேலூர் விமான நிலையத்தை ஆய்வு செய்து, அறிக்கையை தாக்கல் செய்தனர். இதனால், விரைவில், விமானங்களை இயக்குவதற்கான அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனுமதி கிடைக்கவில்லை.

இந்நிலையில், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் வேலூர் விமான நிலையத்தில் டெல்லியில் இருந்து வந்த இந்திய சிவில் போக்குவரத்து விமான இயக்குனரக அதிகாரிகள் 3 நாட்கள் ஆய்வு நடத்தினர். ஆய்வு முடிந்து டெல்லிக்கு சென்றனர். இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் வேலூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு குறித்து விமான போக்குவரத்து ஆணைய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினர் ஆய்வின் போது, விமான நிலையத்தை சுற்றியுள்ள கம்பி வேலியை அகற்றி விட்டு, கற்கள் மூலம் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு பணிக்காக ரூ10 கோடி நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து, வேலூர் விமான நிலையத்தை சுற்றியுள்ள கம்பி வேலிக்கு பதிலாக கற்களை கொண்டு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இப்பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, இந்த ஆண்டுக்குள் விமான போக்குவரத்து சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.