கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதிய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கூடலூர் : தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் கூடலூர் வட்டக் கிளையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூடலூர் வட்டக்கிளை தலைவர் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிவகாசியில் நடைபெற்ற மாநில மாநாட்டு அறைகூவல் தீர்மானத்தின்படி 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
தமிழக அரசு 2021ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பிடித்தம் செய்வதை 11 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர், போன்ற தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுபவர்களுக்கு ரூ.7850-ஐ ஓய்வூதியமாக வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அரசே எடுத்து நடத்த வேண்டும்.
சாலைப்பணியாளர்களின் 41 மாத வேலை நிறுத்த காலத்தை வரன்முறை செய்ய வேண்டும். ஒன்றிய அரசு வழங்கிய 3% சதவீத அகவிலைப்படியை மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
செயலாளர் விஷ்ணு தாசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மின்வாரிய சங்க தலைவர் கேட்பெரே மேத்யூ, போக்குவரத்து சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், தபால்துறை சங்க பொறுப்பாளர் முத்துசாமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிவபெருமாள் ஆகியோர் வாழ்த்தினர்.
ஓய்வூதியர் சங்க முன்னாள் துணைத் தலைவர் தங்கராஜ் நிறைவுரையாற்றினார். வட்டக் கிளை துணைத்தலைவர் சோமசுந்தரம் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மகளிர் உள்ளிட்ட ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.