Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கட்சிப்பணிகளை சரிவர செய்யாததால் வட சென்னை, கன்னியாகுமரி அதிமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடி நீக்கம்: எடப்பாடி அதிரடி நடவடிக்கை

சென்னை: கட்சி பணிகளை சரிவர செய்யாததால் வடசென்னை, கன்னியாகுமரி அதிமுக மாவட்ட செயலாளர்களை அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் புரசை வி.எஸ்.பாபு (முன்னாள் எம்எல்ஏ) ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

* வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் பொறுப்பில் முன்னாள் எம்எல்ஏ வி.எஸ்.பாபு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

* அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் டி.ஜி.வெங்கடேஷ்பாபு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

* கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஜாண்தங்கம், திருவட்டார் மேற்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.ஜெயசுதர்ஷன் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

* கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் ஆர்.ஜெயசுதர்ஷன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

* அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் டி.ஜாண்தங்கம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் டி.ஜாண்தங்கம் ஆகியோர் கட்சி பணிகளை சரிவர செய்யாததால் தான் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.