Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

நாடாளுமன்றத்தில் தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம்: எதிர்க்கட்சிகள் விரைவில் முடிவு செய்யும்: காங்கிரஸ்

புதுடெல்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வருவது குறித்து எதிர்க்கட்சிகள் விரைவில் முடிவெடுக்கும் என்று மூத்த காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் என்னும் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை சந்தித்து புகார் அளித்தார்.

அப்போது மம்தாவுக்கும் தேர்தல் கமிஷனர்களுக்கும் கடும் விவாதம் ஏற்பட்டது. இதனால் அதிருப்தியில் பாதியிலேயே வெளியேறினார். இது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில்,ஞானேஷ்குமார் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து யோசிக்க வேண்டும் என்றார். ராகுலின் பேச்சு பற்றி மம்தா பானர்ஜியிடம் கேட்ட போது, ஞானேஷ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வந்தால் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று கூறினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று பேட்டியளித்தார். அப்போது இந்த விவகாரத்திற்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, பதிலளித்த வேணுகோபால், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவது பற்றி எதிர்க்கட்சிகள் கூடி விரைவில் முடிவெடுக்கும் என்றார்.