பாகிஸ்தான் கடற்படையினர் சிறைபிடித்த தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடிதம்
அந்த கடிதத்தில், பாகிஸ்தான் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 14 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் பாகிஸ்தான் அதிகாரிகள் சிறைபிடித்ததை அறிந்த இந்திய அரசு, கைது செய்யப்பட்ட மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க ஏதுவாக, பாகிஸ்தான் அரசின் கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்றுள்ளதாகவும், மீனவர்களுக்கு தூதரக அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகளால் இதுவரை அது வழங்கப்படவில்லை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம், சிறைபிடிக்கப்பட்டுள்ள 14 மீனவர்களுக்கும் விரைவில் தூதரக அனுமதி கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து செய்து வருவதாகவும், மீனவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் வரை அவர்களது பாதுகாப்பு மற்றும் உடல்நலனை உறுதி செய்யுமாறு பாகிஸ்தானிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்திய தூதரகம் இதை தொடர்ந்து கண்காணித்து, மீனவர்களை முன்கூட்டியே விடுவிப்பதற்கும், தாயகம் திரும்புவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.