Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

29 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட பாக். வான்வழி தாக்குதலில் ஆப்கனில் 36 பொதுமக்கள் பலி: 160 பேர் காயமடைந்ததாக தகவல்

காபூல்: பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே சமீபகாலமாக எல்லையில் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. சீனா உள்ளிட்ட நாடுகள் சமரசம் செய்தும் கூட பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் தொடர்ந்து எல்லையில் சண்டையிட்டு வருகின்றன. சமீபத்தில் கராச்சியில் உள்ள துணை ராணுவப் படையான ரேஞ்சர்சின் பிராந்திய தலைமையகத்தை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடந்தது. இதில் 4 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் இரவு ஆப்கானிஸ்தான் எல்லையில் வான்வழி தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் நேற்று தகவல் வெளியிட்டார். கைபர் பக்துன்க்வாவின் பஜார் மாவட்டத்தில் ஆப்கன் எல்லையை ஒட்டிய பகுதிகளில் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மற்றும் முகாம்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 29 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தரார் கூறி உள்ளார்.

இந்த தாக்குதல் கோழைத்தனமான ஆக்கிரமிப்பு நடவடிக்கை மற்றும் கொடூரமான செயல் என ஆப்கானிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசின் துணை செய்தி தொடர்பாளர் ஹம்தல்லா பித்ரத் கூறுகையில், ‘‘பாக்டியா மாகாணத்தின் சாம்கானி மாவட்டத்தில் ஒரு வைீட்டை பாகிஸ்தான் படைகள் குறிவைத்ததில் ஒரு முதியவரும் குழந்தையும் கொல்லப்பட்டனர். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் காயமடைந்தனர்.

அவர்களை மீட்க அப்பகுதி மக்கள் கூடியிருந்த போது பாகிஸ்தான் படை மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 28 பேர் கொல்லப்பட்டனர். 158 பேர் காயமடைந்தனர். மேலும் பாக்டியாவின் கியான் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்’’ என்றார்.

இது பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை மோதலை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.