மரங்கள் நட்டு பத்மஸ்ரீ விருது பெற்ற சாலுமரத திம்மக்கா காலமானார்
பெங்களூரு: கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம், குப்பி தாலுகாவில் பிறந்தவர் திம்மக்கா(114). சிறு வயது முதல் சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்டிருந்த திம்மக்கா, தனது கணவருடன் இணைந்து சாலைகளில் மர கன்றுகள் நடும் சேவையை தொடங்கினார். மாநில நெடுஞ்சாலை 94ல் அவர் சுமார் 385 ஆலமரங்கள் நட்டு வளர்த்தார். சாலையோரத்தில் வரிசையாக மரங்கள் நட்டு சுற்றுச்சூழலை பாதுகாத்ததால் சாலுமரத திம்மக்கா என்று பெருமையுடன் அழைக்கப்பட்டார். மாநில வனத்துறையின் கீழ் இயங்கி வரும் வனப்பகுதிக்கு சாலுமரத திம்மக்கா பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அவரின் சேவை குறித்து பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள். கர்நாடக மாநில மக்களால் ‘‘ மரங்களின் தாய்’’ என்று அழைக்கப்படுகிறார். சாலுமரத திம்மக்காவின் சேவையை பாராட்டி பல்கலைக்கழகங்கள் கவுரவ டாக்டரேட் பட்டம் வழங்கியுள்ளது. மாநகராட்சி சார்பில் கெம்பேகவுடா விருது, மாநில அரசின் சார்பில் கர்நாடக ராஜ்யோத்சவ விருது, ஒன்றிய அரசின் சார்பில் பத்மஸ்ரீ உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் முதுமை காரணமாக நேற்று காலமானார்.