ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்கள் இல்லாததால் கண்ணாடி மாளிகை மலர் அலங்காரங்களை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
இரண்டு சீசன்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் மலர்கள் இல்லாத நிலையில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புவது வாடிக்கை. இதனால் பூங்காவிற்கு வரும் பயணிகளை அனைத்து சீசனிலும் மகிழ்விக்க எப்போதும் கண்ணாடி மாளிகையில் பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும். இந்நிலையில் முதல் சீசனுக்காக தாவரவியல் பூங்காவில் உள்ள பாத்திகளில் இருந்து இந்த மலர் செடிகள் அகற்றப்பட்டு தற்போது விதைப்பு பணிகளுக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் பூங்காவில் மலர்கள் இல்லாத நிலையில் கண்ணாடி மாளிகையில் உள்ள மலர் அலங்காரங்களை மட்டும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்த கண்ணாடி மாளிகையில் மலர் தொட்டிகளை கொண்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் கோபுரம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இதன் அருகே நின்று சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். தற்போது பால்சம், சைக்ளோபின், பேன்சி , பெட்டோனியம் உட்பட பல்வேறு வகையான மலர் தொட்டிகளை கொண்டு இந்த மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனைச் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.