Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பழங்கால மனிதனும் பார்பிக்யூ சமையலும்!

இன்றைய காலகட்டத்தில் நாம் விதம் விதமான, வகை வகையான உணவுகளை உண்டு மகிழ்கிறோம். ஆனால், சமையல் என்றொரு முறை மனித வாழ்வில் எப்படி உருவானது என்பதைப் பார்த்தோமேயானால், பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கற்கால மனிதனே சமைக்கும் முறையைத் தோற்றுவித்தான் என்பது புலப்படும். இத்தகைய கற்கால மனிதன் ஐரோப்பாவிலும், மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் சுமார் 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இருந்த ஹோமோ வகை இனத்தைச் சேர்ந்தவன். இவர்களின் காலத்தில், மனிதன், காடுகளில் இறந்து கிடந்த விலங்குகளின் மாமிசங்களைப் பச்சையாக சமைக்காமல் உண்டு வாழ்ந்துகொண்டிருந்தான். இவர்களுக்குப் பின்னர், நியாண்டர்தால் என்னும் பிரதேசத்தில் தோன்றிய கற்கால மனிதர்களே மரத்தினாலான ஆயுதங்களைக் கண்டுபிடித்து காடுகளில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த விலங்குகளை வேட்டையாடி உண்ணும் பழக்கத்தை உருவாக்கியுள்ளனர். இவர்களும் ஆரம்பத்தில் வேட்டையாடும் விலங்குகளின் மாமிசத்தைச் பச்சையாகத்தான் சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். இவர்களின் காலத்தில்தான், ஒருமுறை அதிகப்படியான வெப்பம் காரணமாக மிகப்பெரிய காட்டுத்தீ தோன்றி இருக்கிறது.

இந்தக் காட்டுத்தீயில் இருந்து தப்பிக்க முற்பட்ட மனிதர்களும், சில விலங்குகளும் அங்கு இருந்த சில குகைகளில் ஒளிந்துகொண்டு தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர். ஆனால் சில விலங்குகள் தப்பிக்க முடியாமல் தீயில் சிக்கி கருகின. காட்டுத் தீ அணைந்த பிறகு, குகையில் ஒளிந்து கொண்டிருந்த மனிதன் வெளியே வந்தான். பல நாட்களாக உணவு கிடைக்காமல் பசியும் பட்டினியுமாக குகைகளில் கிடந்த மனிதன் அங்கே தீக்கிரையாகிக் கீழே கிடந்த காட்டு விலங்குகளின் மாமிசங்களை எடுத்து உண்ணத் தொடங்கினான். மாமிசங்களைப் பச்சையாக உண்டு பழகியிருந்த அவனுக்கு, இந்த சுட்ட மாமிசங்களின் இறைச்சி மிகவும் வித்தியாசமாகவும், தூக்கலான சுவையுடனும் இருந்திருக்கிறது. அந்த சுவை அவனுக்கு மிகவும் பிடித்துப்போனது. அங்கே கிடைத்த மீதமுள்ள மாமிசங்கள் பலவற்றையும் சேகரித்து பாறை களின்மீது வெயலில் போட்டு வைத்து அவ்வப்போது உண்டு வந்திருக்கிறான். அந்த மாமிசங்கள் வெயிலில் இருக்கவே, சூரியஒளியால், பாறைகளில் ஏற்பட்ட வெப்பத்தினால் தானாகவே பதப்படுத்தப்பட்ட உணவாக மாறிவிட்டன. அவற்றை மனிதன் உண்ண ஆரம்பித்தான். அதன்பிறகே, நெருப்பை உருவாக்க முயன்றிருக்கிறான். அப்போது இரு கற்களை உரசுவதன் மூலம், நெருப்பை ஏற்படுத்த முடியும் என்பதைக் கண்டுபிடித்து, இதனைக் கொண்டு விலங்குகளை வேட்டையாடி நெருப்பில் போட்டு சுட்டு, பதப்படுத்தி உண்ணத் தொடங்கியுள்ளான். அதற்குப் பின்னரே வேக வைத்து சமைத்து உண்ணும் பழக்கமும் தோன்றி இருக்கிறது.

இவர்களது காலத்திலேயே மனிதன் அதிகப்படியான குளிரால், அங்கே இறந்து கிடந்த விலங்குகளின் தோல்களை குளிருக்கு எடுத்துப் போர்த்திப் பார்த்திருக்கிறான். இதனால் குளிர் குறைவாக இருப்பதை உணர்ந்துள்ளான். அதன்பின்னரே, தோலால் ஆன ஆடைகளை உருவாக்கி அணிந்துகொண்டு குகைகளில் வாழத் துவங்கினான். தென்மேற்கு பிரான்சில் 50 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பெச்சுடியாசிசு என்னும் தளத்தில் கண்டறியப்பட்ட மாங்கனீசு டை ஆக்சைடு கற்கள் நியாண்டர்தால் மனிதர்கள் கற்களைப் பயன்படுத்தி, நெருப்பை உண்டாக்கி சமைத்து சாப்பிட்டு வாழ்ந்தனர் என்பதைத் தெளிவான சான்றாக விளக்குகிறது. இவ்வாறு கற்கால ஆதிமனிதன் நெருப்பில் சுட்டு சாப்பிட்ட மாமிச உணவுகள்தான் இன்று நம்மிடையே இக்காலத்தில் தந்தூரி என்றும் பார்பிக்யூ என்றும் உருவமடைந்து வலம் வருகின்றன. பல்வேறு உணவு கொண்டாட்டங்களிலும், விருந்துகளிலும் இவ்வகை தந்தூரி மற்றும் பார்பிக்யூ உணவுகள் மதிப்பு மிகுந்ததாக, இப்போது மக்கள் மனதில் இடம் பிடித்துக் கொண்டு இருக்கிறது. மனித நாகரிகம் வளர்ச்சி அடைய அடைய அவன் சாப்பிட்ட உணவுப் பழக்கவழக்கமும் உணவு உற்பத்தியும் இடத்திற்கு தகுந்தவாறு மாறுபட்டு வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் நம் முன்னோர்கள் சாப்பிட்ட உணவுகளை நாம் இப்போது சாப்பிடுவதில்லை. இன்னும் பல நூற்றாண்டுகள் கழத்து நாம் இப்போது கடைப்பிடிக்கும் உணவுப் பழக்கம் மறைந்து, வேறு

பரிமாணம் எடுக்கலாம்.