Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அணு ஆயுத மையங்களுக்கு அருகில் பிரமாண்ட ஏவுதளங்களை கட்டிய சீனா: செயற்கைகோள் புகைப்படங்கள் மூலம் அம்பலம்

பீஜிங்: அணு ஆயுத மையங்களுக்கு அருகில் பாலைவனப் பகுதியில் ஏவுதளங்களுடன் பிரமாண்டமான ராணுவ கட்டமைப்பை சீனா உருவாக்கியிருப்பது செயற்கைகோள் புகைப்படங்கள் மூலம் அம்பலமாகியிருக்கிறது. உலகின் தற்போதைய சூழலில், அணு ஆயுத போர் வெடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பது நிதர்சனமாகி உள்ளது. அத்தகைய சவாலை எதிர்கொள்ள எதிர்கால போர்களுக்கு ஏற்ற வகையில் இப்போதே தங்கள் ராணுவ கட்டமைப்புகளை வல்லரசு நாடுகள் வலுப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், சீனாவில் பிரமாண்டமான ராணுவ தளம் கட்டப்பட்டு வரும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.  அமெரிக்காவில் உள்ள எந்த இடத்தையும் தாக்கக் கூடிய அணு ஏவுகணைகளை சீனா ஏற்கனவே தயாரித்துள்ளது. அத்தகைய தொலைதூர பகுதிகளுக்கு செல்லக் கூடிய ஏவுகணைகளை வைத்திருக்கும் மையங்களுக்கு அருகில் சீனா ஏவுதளங்கள், பதுங்குகுழிகள், தகவல் தொடர்பு வசதிகள் கொண்ட பிரமாண்டமான ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கும் செயற்கைகோள் புகைப்படங்களை ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கிழக்கு சின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் தன்னாட்சி பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வரும் இந்த ராணுவ கட்டமைப்பில் 2 எண்கோண வடிவ வளாகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த 2 தளங்களும் ஹமி அணு ஏவுகணை மையத்தின் தென்மேற்கில் இருந்து சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சீனாவின் முதன்மையான அணு ஆயுத சோதனைப் பகுதியான லோப் நூருக்கு அருகே 3வது தளம் கட்டுமானத்திற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது கட்டப்பட்டுள்ள 2 எண்கோண வளாகங்களில் ஏவுதளங்கள், பதுங்கு குழிகள், தகவல் தொடர்பு வசதிகள், ஆயுத கிடங்குகள், விமான நிலையங்கள், ஹமி அணு ஆயுத மையத்துடன் இணைக்கும் ரயில் முனையங்கள், பெரிய ராணுவ வாகனங்கள் நிறுத்துமிடங்கள், வீரர்கள் தங்குமிடங்கள் கட்டப்பட்டுள்ளதை செயற்கைகோள் புகைப்படங்கள் காட்டுகின்றன.

குறிப்பாக, ஒவ்வொரு எண்கோண வளாகமும், சுற்றியுள்ள பாலைவனத்திற்குள் ஆழமாக நீண்டு செல்லும் மண் பாதைகள் மற்றும் குழாய்களின் ஒரு விரிவான வலையமைப்பின் மையமாக உள்ளன.இந்தப் பாதைகள், பாறை நிறைந்த நிலப்பரப்பு மற்றும் வறண்ட ஓடைப் படுகைகளுக்கு இடையில் அமைந்துள்ள கான்கிரீட் தளங்களுடன் இணைகின்றன.

இந்தத் தளங்கள், நகரும் வான் பாதுகாப்பு அமைப்புகள், மின்னணுப் போர் உபகரணங்கள் அல்லது சில பெரிய தளங்களைப் பொறுத்தவரை, சாலை வழியே நகர்த்தக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்தனர். வடக்கில் உள்ள எண்கோண வளாகத்தில், விண்வெளி அல்லது நுண்ணலைத் தொடர்பு வசதியாக இருக்கக்கூடிய கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

அங்குள்ள செயற்கைக்கோள் தட்டுகள் மற்றும் 2 பெரிய கோபுரங்களை அவர்கள் சுட்டிக்காட்டினர். சீனாவின் அணு ஆயுதங்களுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதை முறியடிதற்கான முழு அம்சங்களும் கொண்டதாக இந்த ராணுவ தளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையை சீனா கொண்டிருப்பதாக அடிக்கடி கூறி வருகிறது.

அதே சமயம் தைவான் விவகாரத்தில் சீனா எப்போதும் விடாப்பிடியாக இருந்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பீஜிங் சென்ற போது கூட, தைவான் விவகாரத்தை தவறாக கையாண்டால் அது சீனா-அமெரிக்கா இடையே போருக்கு கூட வழிவகுக்கும் என சீன அதிபர் ஜின்பிங் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

* அமெரிக்கா கவலை

சீனாவின் ராணுவ கட்டமைப்பு குறித்து அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத் கூறுகையில், ‘‘சீனாவின் வளர்ந்து வரும் ராணுவ பலத்தை எதிர்கொள்ள ஆசிய கூட்டாளிகள் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க வேண்டும். மேலும், சீனாவின் ராணுவ குவிப்பு மற்றும் பிராந்தியத்திற்கு அப்பாலும் அதன் ராணுவ நடவடிக்கைகளின் விரிவாக்கம் நியாயமான கவலையாக உள்ளது’’ என்றார்.

* ஆச்சரியப்படும் ஆய்வாளர்கள்

சீனாவின் வடமேற்குப் பாலைவனத்தில் உருவாகி வரும் பிரமாண்டமான ராணுவ தளத்தின் பரப்பளவு, அனுபவம் வாய்ந்த ஆய்வாளர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. ‘‘நான் இது போன்ற ஒன்றை இதற்கு முன் பார்த்ததில்லை. இது ஒரு அசாதாரண முயற்சி’’ என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் அணுசக்தி தகவல் திட்டத்தின் இயக்குனர் ஹான்ஸ் கிறிஸ்டென்சன் கூறினார்.