உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நிபா வைரஸ் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்ய நடவடிக்கை: மருந்து நிறுவனங்களுக்கு ஐசிஎம்ஆர் அழைப்பு
புதுடெல்லி: இந்தியாவில் மிக அதிக உயிரிழப்புகளை கொண்ட வைரசாக நிபா மிரட்டி வருகிறது. வவ்வால், பன்றி போன்ற விலங்குகள் மூலம் மனிதனுக்கு பரவும் இந்த வைரஸ் தொற்று மூலம் ஆண்டுதோறும் பல உயிர்கள் பலியாகின்றன. கடந்த 2001 முதல் மீண்டும் மீண்டும் இந்த வைரஸ் அவ்வப்போது மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இந்த வைரசுக்கு உலகளவில் உரிமம் பெற்ற எந்த தடுப்பூசியும், வைரஸ் தடுப்பு மருந்துகளும் கிடையாது. ஆன்டிபாடிகள் மூலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி தடுக்க முடியும்.
அந்த வகையில், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் நிபா வைரசுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. விலங்குகளிடம் நடத்தப்பட்ட இந்த சோதனை முயற்சிகள் வெற்றிகரமான முடிவை வழங்கி உள்ளன. இதைத் தொடர்ந்து, மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய இந்திய தொழில்துறையினரின் ஒத்துழைப்பை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடியுள்ளது. இதுதொடர்பாக ஐசிஎம்ஆர் வெளியிட்ட ஆர்வம் தெரிவிப்பு அறிக்கையில், தகுதியான நிறுவனங்கள், உற்பத்தியாளர்களுடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
* வைரஸ் பரவலை தடுக்க நம் உடல் உற்பத்தி செய்யும் புரதமே ஆன்ட்டிபாடி.
* மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் என்பது ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட புரதங்கள் ஆகும்.
* இவை, தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளுக்கு எதிராக பாதுகாக்க நோயெதிர்ப்பு மண்டலத்தால் உற்பத்தி செய்யப்படும் ஆன்டிபாடிகளைப் பிரதிபலிக்கின்றன.
