Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஜூன் மாதத்தில் புதிய சேவை தொடக்கம் நாகை - இலங்கை கப்பல் பயண கட்டணம் குறைப்பு: மாணவர்களுக்கு 10% தள்ளுபடி ஒரு ஆசிரியருக்கு இலவசம்

நாகப்பட்டினம்: நாகை- இலங்கை கப்பல் போக்குவரத்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் 250 பயணிகள் பயணிக்கும் மற்றொரு கப்பல் சேவை தொடங்கப்படவுள்ளதாக தனியார் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. நாகை-இலங்கை இடையே இயக்கப்பட்டு வரும் சுபம் கப்பல் நிறுவன இயக்குநர் சுந்தராஜன் நேற்று அளித்த பேட்டி: நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பயணிகள் ஆதரவுடன் இந்த போக்குவரத்து சேவை நடந்து வருகிறது. செவ்வாய்கிழமை தவிர வாரத்திற்கு 6 நாட்கள் கப்பல் சேவை நடைபெறுகிறது.

இந்நிலையில் கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு செல்ல போக்குவரத்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.8,500 டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது ரூ.8 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. பயணிகள் 10 கிலோ மட்டுமே லக்கேஜ் எடுத்து செல்ல அனுமதி இருந்த நிலையில் தற்போது 22 கிலோ வரை லக்கேஜ் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு டிக்கெட் விலையில் 10 சதவீத தள்ளுபடியும், அவர்களை வழிநடத்தி செல்லும் ஒரு ஆசிரியருக்கு இலவச டிக்கெட் என்றும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் முதல் வாரத்தில் 3 மணி நேரத்தில் இலங்கையை சென்றடையும் வகையில் 250 பயணிகள் பயணிக்கும் மற்றொரு கப்பல் சேவை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு தொடங்கப்படும். வரும் ஜூலை முதல் வாரத்தில் இருந்து சரக்குகள் கப்பல் சேவையும் தொடங்கப்படவுள்ளது. ரூ.15 ஆயிரம் முதல் சுற்றுலா திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தலைமன்னார், திரிகோணமலை மற்றும் ராமாயண பாதை போன்ற பிரபல இடங்களுக்கு பயணம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்தும் இலங்கைக்கு கப்பல் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கப்பல் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.