புதுடெல்லி: நீட் நுழைவுத்தேர்வில் தங்கள் குறித்திருந்த ஓஎம்ஆர் தாள்களுக்கும், தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வழங்கிய அதன் நகல்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாக 6 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த மே 3ம் தேதி நடந்த நீட் யுஜி நுழைவுதேர்வில் வினாத்தாள் வெளியானதால் அது ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில், நீட் யுஜி தேர்வின் போது தாங்கள் பயன்படுத்திய ஓஎம்ஆர் தாள்களுக்கும், தேசிய தேர்வு முகமையால் வழங்கப்பட்ட அதன் நகல்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாக கூறி 6 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.
தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக ஆஜரான வழக்கறிஞர், ‘‘600 மற்றும் 650க்கும் மேற்பட்ட மதிப்பெண்களை பெற்ற 6 மாணவர்கள் தொடர்பான இந்த வழக்கு, என்டிஏவால் பதிவேற்றப்பட்ட ஓஎம்ஆர் தாள்கள், தேர்வின் போது அவர்கள் உண்மையில் குறித்த பதில்களில் இருந்து வேறுபடுவது தொடர்பனது.
இது குறித்து மாணவர்கள் என்டிஏவுக்கு இமெயில் அனுப்பியும் நேரில் சென்றும் புகார் அளித்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே கவுன்சிலிங் தொடங்கும் முன்பாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்’’ என்றார். இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதி ஒப்புக் கொண்டார்.

