Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

தேசிய அளவில் தொடரும் கல்வித்துறை குளறுபடிகள்; நீட், சிபிஎஸ்இ, கியூட்-ஐ தொடர்ந்து ஜோசா இணையதளமும் முடக்கம்: மாணவ, மாணவியர்கள் தவிப்பு

நாகர்கோவில்: இந்தியக் கல்வித்துறையில் தேசிய அளவில் நடத்தப்படும் முக்கிய நுழைவுத் தேர்வுகள் மற்றும் அதற்கடுத்தக்கட்ட மாணவர் சேர்க்கை நடைமுறைகள் சமீபகாலமாகப் பெரும் குளறுபடிகளை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் நாடுமுழுவதும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது போன்ற நிகழ்வுகள் நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே ஏற்கனவே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. அதேபோல், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, அதன் ஓஎஸ்எம் எனப்படும் கணினி வழி மதிப்பீட்டு முறையில் ஏற்பட்ட குளறுபடிகளால் பல மாணவர்களின் மதிப்பெண்கள் பாதிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முயன்றபோது, அதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் நீண்ட நேரம் முடங்கியது மாணவர்களை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இது ஒருபுறமிருக்க, கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான கியூட் நுழைவுத் தேர்விலும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகப் பல தேர்வு மையங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இத்தகைய தொடர் குளறுபடிகளால் ஆங்காங்கே தேர்வர்களும் பெற்றோர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சூழல் நிலவுகிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், நாட்டின் மிக உயரிய கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி மற்றும் ஐஐஐடி போன்ற தொழில்நுட்பக் கழகங்களில் மாணவர் சேர்க்கையை நடத்தும் ஜோசா கலந்தாய்வு இணையதளமும் தற்போது முடக்கத்தைச் சந்தித்துள்ளது. ஜெஇஇ மெயின் மற்றும் அட்வான்ஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, தங்களுக்குப் பிடித்தமான பொறியியல் இடங்களைத் தேர்வு செய்யக் காத்திருந்த லட்சக்கணக்கான மாணவர்களுக்காக, இந்த கலந்தாய்வு இணையதளம் ஜூன் 2-ம் தேதி செயல்பாட்டுக்கு வந்தது. ஆனால், இணையதளம் தொடங்கிய வேகத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் செயலிழந்தது. இணையதளப் பக்கத்தில் ‘திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணி நடைபெறுகிறது, சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்க்கவும்’ என்ற செய்தி மட்டுமே சிவப்பு நிற எழுத்துக்களில் தோன்றுவதால், மாணவர்கள் தங்களது விருப்ப இடங்களைப் பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். நேற்று காலை முதல் இந்தநிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்பம் உலகளவில் பேசப்படும் வேளையில், நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான கல்வி இணையதளங்கள் இவ்வாறு அடுத்தடுத்து முடங்குவதும், மதிப்பீட்டு முறைகளில் குளறுபடிகள் ஏற்படுவதும் மாணவர்களின் எதிர்காலத்தைப் பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது. கடுமையான போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு, பல ஆண்டுகள் உழைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, இது போன்ற தொழில்நுட்பத் தடைகள் கூடுதல் மன அழுத்தத்தைத் தருகின்றன.

தேசியத் தேர்வு முகமையும், மத்திய கல்வி அமைச்சகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, இது போன்ற தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும், வெளிப்படையான மற்றும் தடையற்ற மாணவர் சேர்க்கை முறையை உறுதி செய்ய வேண்டும் என்றும் கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அடுத்தடுத்து அரங்கேறும் இந்த குளறுபடிகள் ஒட்டுமொத்தத் தேர்வு முறை மீதான நம்பிக்கையையே குலைக்கும் விதமாக இருப்பதாகப் பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.