செங்கல்பட்டு மாவட்டம் காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் விவசாயிகளுக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், வேளாண் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நடத்தப்படும் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் கடந்த மே 29ம் தேதி தொடங்கி ஜூன் 12ம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் பிரச்சார இயக்கத்தின் சார்பில் காரிப்பருவத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேளாண் தொழில்நுட்பங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டதோடு நேரடி களப்பயிற்சிகளும் வழங்கப்பட்டது. இப்பிரச்சாரத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த உயர் தொழில்நுட்பங்கள், வேளாண் நலத்திட்டங்கள் குறித்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது. இயற்கை விவசாயம், இடுபொருட்கள் தயாரித்தல், மண் பரிசோதனை, வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் ஒருங்கிணைத்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை போன்ற தொழில்நுட்பங்கள் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இயற்கை வேளாண்மை, கால்நடை மேம்பாடு, வேளாண்மை மற்றும் அதுசார்ந்த துறைகளில் உள்ள திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Advertisement


