சென்னை மட்டும் இல்லை, பல நகரங்களில் தற்போது பானிபூரிதான் அதிக மக்களால் சாப்பிடப்படும் ஈவ்னிங் ஸ்நாக்ஸ். பொதுவாகவே பானிபூரி என்றாலே, மசாலா பூரி, பேல் பூரி, ஆலு பூரி, சன்னா பூரி போன்ற அயிட்டங்களைத்தான் கடைக்காரர்கள் கொடுப்பார்கள். பானிபூரியின் உள்ளே கொண்டைக் கடலை உள்ளிட்டவற்றை நிரப்பி, அதனை பானியில் கலந்து கொடுப்பார்கள். மொறுமொறுப்புத் தன்மையும், மசாலாவின் டேஸ்டும், ஒருவித புளிப்பு கலந்த பானியின் ருசியும் நம்மை மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். இத்தகைய பானி பூரி முழுக்க முழுக்க வெஜ்ஜிகளின் டிஷ்ஷாக மட்டும்தான் இருந்து வருகிறது. தற்போது இதனை நான்வெஜ் டிஷ்ஷாகவும் மாற்றி இருக்கிறார் பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் பீச்சில் நாதுஸ் என்ற கடையை நடத்தி வரும் சௌந்தர். “ திருவான்மியூர்தான் நான் பிறந்து வளர்ந்து தற்போது வசிக்கின்ற இடம். 10வது வரைக்கும் படித்த நான் ஒரு தனியார் கம்பெனியில் சிறிது காலம் வேலை பார்த்தேன். வீட்டில் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமைப்பதுதான் என் பொழுது போக்கு.
அப்படி ஒருமுறை ட்ரை செய்ததுதான் நான்வெஜ் பானிபூரி. வழக்கமாக பானிபூரியில் ஸ்டப் செய்து தரப்படும் உருளைகிழங்கு, சுண்டலுக்கு மாற்றாக நான் சிக்கன், ஃபிரான் வைத்து செய்து பார்த்தேன். எதிர்பார்த்ததை விட டிஷ்ஷின் டேஸ்ட் அல்டிமேட்டாக இருந்தது. நண்பர்கள், மனைவி மற்றும் வீட்டில் இருப்பவர்கள் என்னை பானிபூரி கடை ஒன்றை துவங்கு, கண்டிப்பாக நல்ல வரவேற்பு கிடைக்கும் என கூறினார்கள். சரி சொல்கிறார்கள், நாமும் முயற்சி செய்து பார்ப்போம் என்று இந்த பானிபூரி கடையைத் துவங்கினேன். நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சிக்கன், ஃபிரான் இரண்டையும் மசாலா கலந்து ஆவியில் மட்டுமே வேக வைத்து எடுப்பேன். ஆவியில் வேக வைத்து எடுத்த சிக்கன் மற்றும் ஃபிரானை பூரியில் ஸ்டப் செய்து அதோடு பானி கலந்து கொடுப்பேன். இதற்கு எப்போதும் பயன்படுத்தக்கூடிய பானிக்கு மாற்றாக நாங்கள் தயார் செய்யும் ஸ்பெஷல் பானியைக் கொடுக்கிறேன். அதேபோல பயர் பானி பூரியும் கொடுத்து வருகிறோம். பானிபூரியில் வாடிக்கையாளர்கள் கேட்கும் சிக்கன், ஃபிரான் மசாலாவை ஸ்டப் செய்து அதன் மேல் தேங்காயை வைத்து நெருப்பு பற்ற வைத்து, அதன்பின் ஆற வைத்து கொடுப்பேன். இதனை சாப்பிடும்போது தேங்காயின் ஃப்ளேவரும் நன்றாக தெரியும். இதோடு பனீர் பானிபூரி, மஸ்ரூம் பானிபூரி, பயர் பிஸ்கட், சாக்லேட் பானிபூரி என வெரைட்டியாக கொடுக்கிறேன்’’ என்கிறார் செளந்தர்.


