Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

சென்னை: இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; இஸ்லாமிய மக்களை மிகக்கேவலமாக இழிவுப்படுத்தி பயங்கரவாதிகளாகக் கொலைகாரர்களாக சித்தரிக்கும் ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் நீட்சியாக கேரளா ஸ்டோரி-2 திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மத மக்களை ஒட்டுமொத்தமாகக் குற்றவாளி கூண்டில் ஏற்றும் காட்சிப்படுத்தல்கள் மத நல்லிணக்கத்திற்கும், பொது அமைதிக்கும் பேராபத்தை ஏற்படுத்தக்கூடியவை. படைப்புச் சுதந்திரத்தைவிட முக்கியமானது இந்த நாட்டு மக்களின் உணர்வும், உரிமையும், ஒற்றுமையும், ஒருமைப்பாடுமாகும். அதைச் சீர்குலைக்கும் எதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஆகவே, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழ்நாடு அரசு ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட தடைவிதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அதையும் மீறி இத்திரைப்படத்தை தமிழ்நாடு அரசு திரையிட அனுமதித்தால், ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படம் திரையிடப்படும் ஒவ்வொரு திரையரங்கையும் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு திரைப்படத்தைத் தடுத்து நிறுத்துவோம் என்றும் எச்சரிக்கிறேன்.

தமிழ்நாட்டிலுள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கு, நாங்கள் வைக்கும் வேண்டுகோள் மதக்கலவரத்தை தூண்டும் கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்தைத் தங்கள் திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என்ற தீர்மானத்தை ஒருமனதாக எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். நாம் தமிழர் கட்சி உறவுகள் இத்திரைப்படத்தை முற்று முழுதாகப் புறக்கணிப்பதோடு, திரைப்படம் திரையிடப்படாமல் பெருந்திரளாகத் திரண்டு தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் அறிவுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.