சென்னை: பேரவையில் நேற்று தாக்கல் ெசய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, 91 லட்சம் மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதையும், நகரின் வாழ்வாதார தரத்தை மேம்படுத்தும் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதையும் உறுதி செய்யும் நோக்கில், சென்னை காவல்துறை மற்றும் பெருநகர போக்குவரத்து கழகத்துடன் இணைந்து சென்னை பெருநகர சென்னை மாநகராட்சியின் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு இறுதிகட்ட செயலாக்கத்தில் உள்ளது.
அதன்படி விரிவான நகர்ப்புற போக்குவரத்து வசதிகள் மற்றும் தெருக்கள் மறுசீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதன் ஒரு பகுதியாக 20 இடங்களில் திறன்மிகு வாகன நிறுத்துமிட மேலாண்மை அமைக்கப்படுவதுடன், அம்பத்தூர் மற்றும் கிண்டி தொழிற்பேட்டைகளின் சாலைகள் மறுவடிவமைக்கப்படும். சென்னை ஒரு நிலையான மற்றும் பேரிடர் காலங்களில் விரைந்து மீளும் தன்மையுள்ள நகரமாக மாற்றுவதற்கான தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக பல்வேறு இடங்களில் நீர் நிலைகளை சுற்றியுள்ள பகுதிகளில், பசுமை உட்கட்டமைப்பிற்கான மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
சென்னையில் உள்ள அனைத்து முக்கிய குடிநீர் ஆதாரங்களையும் குடிநீர் விநியோக நிலையங்களுடன் இணைக்கும் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் ரூ.3,108 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் 2023-31ம் ஆண்டில் நிறைவடையும் வகையில் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி இந்த நிதியாண்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.29,863 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
