வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விவரங்களை விவசாயிகள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறை மூலம் உழவர் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்த செயலியின் மூலம் விவசாயிகளின் வளர்ச்சிக்குத் தேவையான 24 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய அரசின் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, விதை சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை, நீர்வடிப்பகுதி திட்டம் மற்றும் வேளாண்மை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மூலம் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதனை அறிந்துகொள்ளலாம். மானிய திட்டங்கள் மூலம் வழங்கப்படும் இடுபொருட்களை விவசாயிகள் பெறுவதற்கு உழவர் செயலி மூலம் தேவையான விவரங்களையும் ஆவணங்களையும் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.
உழவர் செயலியின் மூலம் மண்வளம், மானியத் திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, பயிர் காப்பீடு, உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு, வேளாண் எந்திரங்கள் வாடகை விவரம், சந்தை விலை, வானிலை அறிவுரைகள், உழவர் அலுவலர் தொடர்பு திட்டம், பயிர் சாகுபடி வழிகாட்டி, இயற்கை விவசாய விளைபொருட்கள் விவரம், அணை நீர்மட்டம், வேளாண் செய்தி கள், கருத்துக்கள், பூச்சி நோய் கண்காணிப்பு பரிந்துரை, அட்மா பயிற்சி மற்றும் செயல்விளக்கம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம். தமிழ் மண்வளம் என்ற சேவையில் விவசாயிகள் தங்களது புல எண் விவரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் தங்கள் நிலத்தில் உள்ள சத்துக்களின் விவரம், கார அமில நிலை, உரப்பரிந்துரைகள் ஆகியவற்றைப் பெற்று பயன்பெறலாம். உழவர் செயலியை ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் பிளேஸ்டோர் மூலம் டவுன்லோட் செய்து பூச்சி நோய் கண்காணிப்பு என்ற சேவையின் மூலம் தங்கள் சாகுபடி பயிர்களில் காணப்படும் பூச்சி நோய் தாக்குதலை புகைப்படம் எடுத்து அனுப்புவதன் மூலம் தங்கள் அலைபேசிக்கு குறுஞ்செய்தியாக பெற்று பயன்பெறலாம். வேளாண் செய்திகள் என்ற சேவையில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வட்டாரங்களில் பருவகாலங்களுக்கு ஏற்ற தொழில்நுட்ப செய்திகள், பரிந்துரை ஆகியவற்றை தெரிந்துகொள்ளலாம்.

