சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று லண்டன் புறப்பட்டு சென்றார். சென்னையில் அவரை திமுக நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், உதயநிதியின் மகனுமான இன்பநிதி, லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில், உயர் கல்வி பயின்றார். அந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், இன்பநிதி பட்டம் பெறுகிறார். அந்த நிகழ்ச்சியில், முக.ஸ்டாலின் நேரடியாக கலந்துகொண்டு, லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கும், இன்ப நிதியை வாழ்த்துவதற்காக லண்டன் செல்வதாக கூறப்படுகிறது. அதோடு லண்டனில் சில நாட்கள் தங்கி ஓய்வெடுத்து விட்டு, மேலும் சில சுற்றுலா தலங்களுக்கும் சென்று விட்டு, வருகின்ற 18ம் தேதி மு.க.ஸ்டாலின் லண்டனிலிருந்து, துபாய் வழியாக சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
இதற்காக நேற்று காலை துபாய் வழியாக லண்டன் செல்வதற்காக, மு.க.ஸ்டாலின் காலை 8.15 மணி அளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அவரை சென்னை விமான நிலையத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா மற்றும் பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.


