ஒடிசா மாநிலத்தின் தலைநகரமான புவனேஸ்வரில் 61வது ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் அழகிப்போட்டி நடந்தது. இதில் கோவாவைச் சேர்ந்த சாத்வி செயில் வெற்றிப் பெற்றிருக்கிறார். இவர் 2026ஆம் ஆண்டுக்கான ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் பட்டத்தை வென்றார். இதன் மூலம் அவர் அடுத்ததாக உலக அழகிப் போட்டித் தொடரில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
இதனிடையே இப்போட்டியில், மகாராஷ்டிராவை சேர்ந்த ராஜ் நந்தினி பவார் முதல் ரன்னர் அப் ஆகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ அத்வைதா 2வது ரன்னர் அப் ஆகவும் தேர்வாகினர்.
கர்நாடக மாநிலத்தின் கார்வார் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், கோவாவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியில் பங்கேற்றிருக்கிறார் சாத்வி. கனடாவில் உள்ள பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் சர்வதேச உறவுகள் பாடங்களில் பட்டம் பெற்றிருக்கிறார். பன்மொழித் திறமைக் கொண்ட பெண்.
மாடலிங் துறையில் மட்டுமல்லாமல், தொழில் முனைவோராகவும் கட்டுமான தொழிலில் கால பதித்தவர். ஃபேஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அனுபவம் பெற்றதுடன் கர்நாடக எம்.எல்.ஏ சதிஷ் கிருஷ்ணா செயிலின் செல்ல மகள். குழந்தைகள் நலன், சுகாதாரம் மற்றும் சமூக விழிப்புணர்வு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகம். சாத்விக்கு பயணம் என்றால் ஆர்வம் அதிகம். பல நாடுகளின் கலாச்சாரங்களை விரும்பி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவாராம் சாத்வி.
கடந்த பல ஆண்டுகளில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தியா மிர்சா, மனுஷி சில்லர் போன்ற பல வெற்றியாளர்கள் மூலம் இந்த போட்டி இந்தியாவிற்கு உலகளாவிய அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது.


