Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொளத்தூரில் ரூ.15.42 கோடி மதிப்பீட்டில் எஸ்கலேட்டருடன் நடைமேம்பால பணி: அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆய்வு

சென்னை: கொளத்தூர் - பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் உள்வட்ட சாலையை அடைவதற்கும், கொளத்தூர் ஏரி பூங்கா செல்வதற்கும் 600 மீட்டர் நீளம் மற்றும் 7.50 மீட்டர் அகலம் கொண்ட சர்வீஸ் சாலையின் இருபுறமும் 2.00 மீட்டர் அகலத்திற்கு நடைபாதையும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் கொளத்தூர், செந்தில் நகரில் ரூ.15.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம் மற்றும் ஜி.என்.டி சாலை, பாடி மேம்பாலம் அருகில் ரூ.155.35 கோடி மதிப்பீட்டில் சாலை மற்றும் மேம்பாலம் அகலப்படுத்துதல் முன்னேற்றப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளர்களை அறிவுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, முதல்வர் சமீபத்தில் திறந்து வைத்த கொளத்தூர் பெரியார் நகர் முதல்வர் படைப்பகத்தையும் மற்றும் கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் அமைந்துள்ள குளக்கரை பூங்காவையும் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து, சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பேருந்து நிலையத்தின் பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுகளின்போது மேயர் பிரியா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர், முதன்மைச் செயலாளர் பிரகாஷ், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், மத்திய வட்டார துணை ஆணையர் கவுஷிக், வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர்கள் (பெருநகரம்) ஜவகர் முத்துராஜ், (கட்டுமானம் & பராமரிப்பு) சத்தியபிரகாஷ், கண்காணிப்புப் பொறியாளர் சரவணசெல்வன், சிஎம்டிஏ கண்காணிப்புப் பொறியாளர் ராஜன்பாபு, எம்.டி.சி. இணை மேலாண் இயக்குநர் சுந்தரபாண்டியன், பொது மேலாளர் (இயக்கம்) நெடுஞ்செழியன், மண்டலக் குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் நாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.