Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேட்டூருக்கு நீர்வரத்து 80,984 கனஅடி 10 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் 86,800 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை அது 68,983 கனஅடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் இரவு 88,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70,000 கனஅடியாக சரிந்தது.

அதே சமயம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் 60,740 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் 80,984 கனஅடியாக உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டம், 117.93 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 90.20 டிஎம்சியாக உள்ளது.அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு 22,500 கனஅடியில் இருந்து 26,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. நீர்மட்டம் 118 அடியை எட்டியதாலும், நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும் மேட்டூர் அணை எந்நேரத்திலும் நிரம்பும் வாய்ப்புள்ளது.

அணை முழு கொள்ளளவை(120 அடி) எட்டும் பட்சத்தில் இன்று காலை உபரி நீர் போக்கியான 16 கண் மதகிலிருந்து தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.