மெட்ரோ, எம்.டி.சி. பஸ், மின்சார ரயிலில் சென்னை ஒன் செயலி மூலம் ஒரு ரூபாயில்.. ஒரு பயணம்.. இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது
சென்னை: சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மின்சார ரயில், மெட்ரோ, மாநகர பேருந்து, ஆட்டோ, டாக்சிகளில் பயணிக்க வசதியாக ‘சென்னை ஒன்’ செயலியை கடந்த செப்டம்பர் 22ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த செயலிக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயனர்களாக உள்ளனர். இதுவரை 8.1 லட்சம் டிக்கெட் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பணமில்லா பரிவர்த்தனையின் கீழ் பொது போக்குவரத்து பயணங்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு ரூபாய் சிறப்பு சலுகை கட்டணத்தில் இன்று முதல் ஒரே ஒருமுறை மட்டும் மாநகர பேருந்து, மெட்ரோ மற்றும் சென்னை மின்சார ரயில்களில் பயணிக்கலாம். இந்த கட்டணத்தை யுபிஐ செயலிகள் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். இந்த சலுகையை, ஒரு டிக்கெட்டுக்கு ஒரு முறை மட்டும் தான் கிடைக்கும். இந்த நடைமுறை நவம்பர் 13ம் தேதி(இன்று) முதல் பயன்பாட்டிற்கு வரும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
