மெஹ்ரொலி இரும்புத்தூண் தெற்கு டெல்லி
உலகம் முழுவதும் உள்ள தொல்பொருள் மற்றும் உலோகவியல் ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி அவர்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்து பல ஆண்டுகளாக வியப்பில் ஆழ்த்தியுள்ளது டெல்லியிலுள்ள இரும்புத்தூண். ஏனெனில் இத்தூண் கடுமையான வானிலைகளால் அரிக்கப்படாமல் 1600 ஆண்டுகளாக நிலைத்து நிற்கக் கூடியதாக உள்ளது.
பண்டைய இந்திய கொல்லர்களால் தூய இரும்பைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இத்தூண் 23 அடி 8 அங்குலம் உயரமும், 16 அங்குலம் விட்டமும், 6டன் எடை கொண்டதாக உள்ளது. இதில் 98 சதவீதம் தூய இரும்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. தெற்கு டெல்லியின் மெஹரொலி என்ற பகுதியில் உள்ள குதுப்மினார் வளாகத்தில் இத்தூண் அமைந்துள்ளது.
இவ்விரும்புத்தூணில் உள்ள மர்மத்தை ஐஐடி கான்பூர் (இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி) உலோகவியல் நிபுணர்கள் 2002ஆம் ஆண்டு ஆராய்ச்சி செய்தனர். இவர்கள் இத்தூணில் மிசவேட் என்ற இரும்புக் கலவையிலான மெல்லிய அடுக்கு உள்ளதை கண்டறிந்தனர். மேலும் ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் இரும்பைத் துருவிலிருந்து பாதுகாக்கிறது. இதில் உள்ள உயர் அளவு பாஸ்பரஸ் நல்ல வினையூக்கியாகச் செயல்படுகிறது. இரும்பு உருவாக்கும் முறைகளில் இது தனிப்பட்ட முறையாக கருதப்படுகிறது. பயிற்சி பெற்ற பண்டைக் கால இந்திய கொல்லர்களால் இரும்பு எஃகு மற்றும் கரியினைக் கொண்டு நவீன ஊதுலைகளில் உற்பத்தி செய்த கலவையினைக் கொண்டு வடிவமைத்துள்ளனர். பின்பு சுண்ணாம்பு மற்றும் கரி இவற்றில் உள்ள கசடு ,ஈயம் போன்ற உலோகம் இவற்றின் மூலம் தூண் மூடப்பட்டு உள்ளது. இதில் உள்ள கசடில் இருந்து பாஸ்பரஸ் மிகுதியாக பெறப்படுகிறது. வட இந்தியாவை ஆட்சி செய்த குப்தர்களின் (கி.பி 320-கி.பி 540) வம்சாவளி வந்த சந்திரகுப்த இரண்டாம் விக்ரமாதித்தன் என்பவரால் கி.பி(375-414)ல் நிறுவப்பட்டது. இத்தூணில் பிராமி எழுத்துகளால் பொறிக்கப்பட்ட தகவலின் மூலம் விஷ்ணுவைப் புகழும் வகையில், இரண்டாம் சந்திரகுப்தனால் நிறுவப்பட்டது என அறிய முடிகின்றது.