Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன் இலங்கை எம்.பி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்திப்பு

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன் இலங்கை எம்.பி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்து பேசினார். தமிழ்த்தேசிய பேரவையின் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்-திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார். போருக்கு பிந்தைய சூழலில் ஈழத்தமிழர்கள் சந்திக்கும் நெருக்கடிகளை எதிர்க்கட்சி தலைவருக்கு அவர் விரிவாக விளக்கினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது, கடந்த டிசம்பர் மாதம் அவரை சந்தித்து, ஈழத்தமிழர் பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்ததையும், உடனடியாக ஒன்றிய அரசுக்கு திமுக தலைவர் கடிதம் எழுதி வலியுறுத்தியதையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.

தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர் உரிமைகளுக்காக அண்ணா காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து குரல்கொடுத்து துணை நின்று வரும் இயக்கம் திமுக என்பதை உலகத்தமிழர்கள் அறிவார்கள். அந்த வகையில், ஈழத்தமிழர் நலன் சார்ந்து அவர் கூறியவற்றை, திமுக தலைவரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் செயல்படுவோம் என்று அவருக்கு உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பின்போது, முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வழங்கி, ‘இலங்கை திமுக’ குறித்து எழுத்தாளர் ஷோபாசக்தி எழுதிய கட்டுரையும் அந்த நூலில் இடம்பெற்றிருப்பதை உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.