விழுப்புரம்: விழுப்புரத்தில் மேட்ரிமோனி மூலம் அறிமுகமாகி 2வது திருமணம் செய்த கொள்வதாக கூறி பெண்ணிடம் 46 பவுன் நகை சுருட்டி சென்ற வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராஜா அகமது மகள் ஷகிலாபானு (33). ஏற்கனவே திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர். கணவரால் கைவிடப்பட்ட நிலையில் தற்போது தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் மேட்ரிமோனி மூலம் 2வது திருமணத்துக்காக வரன் தேடி வந்தார்.
அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த ரகமதுல்லா (35) என்பவர் கடந்த ஏப்ரல் 25ம் தேதி முதல் ஷகிலா பானுவுடன் அறிமுகமாகி பழகி வந்துள்ளார். மேலும் ஷகிலா பானுவை திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகிய ரகமதுல்லா, பல்வேறு காரணங்களை கூறி அவரிடமிருந்து சிறுக, சிறுக 46 பவுன் நகையை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் ரகமதுல்லா கடந்த சில நாட்களாக ஷகிலா பானுவிடம் பேசுவதையும், சந்திப்பதையும் தவிர்த்து வந்துள்ளார். நேற்று ஷகிலாபானு போன் செய்தபோது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. விசாரித்ததில் அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. பின்னர்தான் நகைக்காக தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகி ஏமாற்றியுள்ளதும் தெரிய வந்தது. இதனால் அதிருப்தியடைந்த ஷகிலாபானு, விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
