காதலித்து திருமணம் செய்ய மறுப்பு; உணர்ச்சிப்பூர்வமாக உருவான நெருக்கத்தை தவறான நடத்தையாக சித்தரிக்க முடியாது: வாலிபர் மீதான வழக்கு ரத்து, ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: தனிப்பட்ட உணர்ச்சிப்பூர்வ நெருக்கத்தை தவறான நடத்தையாக சித்தரிக்க முடியாது என கூறியுள்ள ஐகோர்ட் கிளை, வாலிபர் மீதான வழக்கை ரத்து செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர்ஒருவரும், இளம்பெண் ஒருவரும் மதுரையில் படித்தனர். அப்போது இருவரிடையே நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2020ல் அந்த இளம்பெண்ணை தனது கிராமத்திற்கு அழைத்துச் சென்ற வாலிபர், அவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவருடன் ஒன்றாக இருந்துள்ளார். பின்னர் ஜாதியை காரணமாக கூறி அவரை திருமணம் செய்ய மறுத்தார்.
இதனால், அந்த இளம்பெண் திண்டுக்கல் புறநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் வாலிபர் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் ஜேஎம் 3வது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த வாலிபர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். ‘‘இந்த வழக்கு பொய்யானது.
இருவருக்கும் இடையேயான உறவு பரஸ்பரம் மற்றும் சம்மதத்தின் அடிப்படையிலேயே நடந்தது. தற்போது, உறவு முறிந்ததால் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.’’ என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்து பிறப்பித்த உத்தரவு: சட்டம் என்பது கட்டாயப்படுத்துதல், ஏமாற்றுதல் அல்லது இயலாமை ஆகியவை மூலம் பாதிக்கப்பட்டால் மட்டுமே தலையிட முடியும்.
தற்போது தனிப்பட்ட உறவு முறிந்த பின் அதை குற்றமாக சித்தரிக்கும் புகார்கள் அதிகரித்து வருகின்றன. தனிப்பட்ட மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தகராறுகளை தீர்க்க குற்றவியல் சட்டத்தை பயன்படுத்த அனுமதிக்க கூடாது. இந்த வழக்கில், மனுதாரரும், புகார்தாரரும் படித்தவர்கள். அவர்கள் உணர்ச்சிப்பூர்வமாக நெருக்கமான உறவில் இருந்துள்ளனர்.
அவர்களுக்கு இடையே நடந்தது, அவர்களின் தனிப்பட்ட விருப்பப்படியானது தான். அந்த நிலைக்கு சென்றபிறகு, தனிப்பட்ட முரண்பாடுகளை, குற்ற நோக்கத்துடன் தவறான நடத்தையாக சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை. எனவே, திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
