Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடல்வாழ் பாலூட்டிகள்

கடல் வாழ் பாலூட்டிகள் என்பது கடலில் வாழும் உயிரினங்கள் அதற்கு ஏற்றவாறு தங்களைத் தகவமைத்துக்கொண்ட ஒரு சிறப்பு விலங்குக் குழுவாகும். இவை பெரிய திமிங்கலங்கள் முதல் சிறிய கடல் நீர்நாய்கள் வரை அனைத்து வடிவங்களிலும், அளவிலும் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

கடல் நாய் (Harbour Seal)

கடல்நாய் (Harbour Seal) என்று சொல்லப்படும் சீல்கள் ஆர்க்டிக் கடற்கரைப் பகுதிகளில் வாழும் ஒரு கடற்பாலூட்டி விலங்கு ஆகும். இவற்றின் விளையாட்டுத்தனமான இயல்பும், நாய்களைப் போன்ற தோற்றமும் நடவடிக்கையும் இருப்பதால் கடல் நாய்கள் என்று அழைக்கப்படுகின்றன. நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய இவை பொதுவாக அட்லாண்டிக், பசிபிக் பெருங்கடல்கள், பால்டிக் கடல், வடகடல் ஆகியவற்றின் கரைப்பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றின் துடுப்புக் கால்கள் நீரிலும் நிலத்திலும் வாழ்வதற்கு தகுந்தவாறு அமைக்கப்பட்டுள்ளன. சீல்கள் பழுப்பு, சாம்பல் நிறங்களில் காணப்படும். சீல்கள் பல்வேறு அளவுகளில் உள்ளன. பெரிய சீல்கள் 1.85 மீட்டர் நீளமும் 130 கிலோ எடையும் வளரக்கூடியவை. இவை குறிப்பிட்ட ஒரே இடத்தில் ஓய்வெடுப்பதை வழக்கமாகக் கொண்டவை. பொதுவாக இவ்விடங்கள், இவற்றைக் கொன்று தின்னும் விலங்குகள் நெருங்கமுடியாததாகவும் தாங்கள் உண்பதற்கு மீன் கிடைக்கக்கூடிய இடமாகவும் இருக்கும். உலகில் தற்போது நான்கு முதல் ஐந்து லட்சம் சீல்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

டால்பின் (Dolphin)

ஓங்கில் என்று சொல்லப்படும் டால்பின்கள் (Dolphin) நீரில் வாழும் ஒரு பாலூட்டி சிற்றினம் ஆகும். இது திமிங்கலம் மற்றும் கடற்பன்றி ஆகியவற்றுடன் நெருங்கிய உறவுமுறை கொண்டது. சுமார் நாற்பது வகையான ஓங்கில் சிற்றினங்கள் பதினேழு வகையான பேரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஓங்கில்களின் உடல் திமிங்கலம் போல் இழை வடிவமுடையது. வால் துடுப்பு குறுக்கு நிலையில் தட்டையானது. இதன் நுனி கூர்மையாக, விளிம்பில், சுழியுடையதாக இருக்கின்றது. இவை 1.2 மீட்டரில் இருந்து 9.5 மீட்டர் வரை உடல் நீளமும் 40 கிலோ முதல் 10 டன் வரை எடையும் கொண்டவை. டால்பின்கள் ஊனுண்ணிகள். மீன்களை உணவாகக் கொள்கின்றன. பொதுவாக இவை 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. உலகம் முழுவதும் இவை காணப்படுகின்றன. குறிப்பாக கண்டத் திட்டுக்களின் ஆழம் குறைந்த கடல் பகுதியில் இவற்றைக் காணலாம். ஓங்கில்கள் அறிவுக்கூர்மை வாய்ந்த விலங்குகளில் ஒன்றாகும்.இவை மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன. இதில் ஆற்று ஓங்கில் அக்டோபர் 5, 2009 அன்று இந்திய தேசிய நீர் விலங்காக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. டால்பின்கள் வேகமாக நீச்சல் அடிக்கும் வண்ணம் நீள் வடிவ உடலைக் கொண்டிருக்கின்றன. நீந்தும்போது முதுகுத்துடுப்பு உறுதித்தன்மையை வழங்குகிறது.

கடல் கீரி (Enhydra lutris, Sea otter)

கடல்கீரி (Enhydra lutris, Sea otter) என்பது ஒரு கடல் பாலூட்டியாகும். கடல் கீரிகள் வடபசிபிக் பெருங்கடலின் வடக்கு மற்றும் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் காணப்படுகின்றன. வயது வந்த கடல் கீரிகள் பொதுவாக 14 முதல் 45 கிலோ வரை எடையுடன் காணப்படுகின்றன. கடல் கீரிகள் கடற்கரையோர சூழ்நிலைகளில் வாழ்கின்றன. அங்கிருந்து கடல் தளத்திற்கு இரை தேடச் செல்கின்றன. இவை கடல் முள்ளெலிகள், பல்வேறு மெல்லுடலிகள் மற்றும் சில மீன்களை உண்கின்றன. கடல் கீரிகளின் எண்ணிக்கை ஒரு காலத்தில் 150,000-300,000 வரை இருந்ததாக கணக்கிடப்பட்டது. ஆனால் இவற்றின் ரோமத்திற்காக 1741 முதல் 1911 வரை ஏராளமாக வேட்டையாடப்பட்டன. இதனால் உலகளவில் இவற்றின் எண்ணிக்கை 1,000-2,000 வரை என்று குறைந்துவிட்டது. இவற்றின் வேட்டைக்கு எதிரான சர்வதேசத் தடை, பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் மறு அறிமுக திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக இவற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது. தற்போது இந்த இனம் இதன் முந்தைய அளவில் மூன்றில் இரண்டு பங்கு அளவு உள்ளது. அலேடியன் தீவு மற்றும் கலிபோர்னியா ஆகிய இடங்களில் இவற்றின் எண்ணிக்கை தற்போது குறைந்துவிட்டது. எனினும் பரவலான இடங்களில் இவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பு வேட்டைக்கு எதிரான சர்வதேசத் தடைக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. இருந்தாலும் கடல் கீரி இன்னும் அருகி வரும் இனமாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது.