மணலி: சென்னை மணலி புதுநகர் நாப்பாளையம் மேம்பாலம் பகுதியில் 5க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் குடியிருப்பு பகுதியில் இருந்து போக்குவரத்து சாலை வழியாக அங்கு பெரும் இடையூறாக கன்டெய்னர் லாரிகள் ஏராளமான சென்று வருகின்றன. இதன்காரணமாக பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.
குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் கடும் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அனைத்தும் அங்குலம், அங்குலமாக நகர்ந்து செல்கின்றன. இதனால் தினமும் மணலி புதுநகர் காவல் ஆய்வாளர் சரவணகுமார், உதவி ஆய்வாளர் வெற்றிவேல் ஆகியோர் தலைமையில் போலீஸ்காரர்கள் ராஜா, மதன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கன்டெய்னர் லாரி உள்பட கனரக வாகனங்கள் அனைத்தும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லாத வகையில் அங்குள்ள சர்வீஸ் சாலையின் குறுக்கே சுமார் 20 அடி அகலத்திற்கு ராட்சத இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள், சமூகநல ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்றனர்.



