Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மதுரை சித்திரைத் திருவிழாவுக்கு தமிழக அரசு ஏற்பாடுகள் சிறப்பு: ஐகோர்ட் கிளை பாராட்டு; பாதுகாப்பு வசதிகள் கோரிய மனு தள்ளுபடி

மதுரை: சித்திரை திருவிழாவின்போது போதிய பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் கோரிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்ததோடு, தமிழக அரசின் ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளது என பாராட்டு தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த ராமமூர்த்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை சித்திரை திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. தொடர்ந்து திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற உள்ளது. இந்த விழாக்காலங்களில் அதிகளவில் மக்கள் கூடுவர். இதனால் மதுரை மாநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறந்து இருந்தால் குற்ற செயல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகளவில் மக்கள் ஒன்று கூடுவதால் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை மதுரை மாநகராட்சி செய்து தர வேண்டும்.

வாகனங்களுக்கு போதிய பார்க்கிங் வசதிகளும் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. போதிய போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட தேவையான முன்னேற்பாடுகள், சுகாதாரமான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘சித்திரை திருவிழா ஏற்பாடுகள் அரசு தரப்பில் தொடர்ந்து சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் விளம்பர நோக்கில் இந்த மனுவை தாக்கல் செய்து உள்ளார். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.