சென்னை: உலகளவில் உயர்கல்வி குறித்து, லண்டனை சேர்ந்த க்யூஎஸ் (QS World University Rankings - குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்) என்ற அமைப்பு ஆய்வு செய்து தர வரிசைப்பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் 2025ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலில் ஆசிய பல்கலைக் கழகங்களின் முதல் 200 இடங்களில் சென்னை அண்ணா பல்கலைக் கழகமும் இடம் பெற்றுள்ளது. அண்ணா பல்கலைக் கழகம் 177வது இடத்தில் உள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகம் 221வது இடத்தையும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 310வது இடத்தையும் பிடித்தது. 3 பல்கலைக் கழகங்களும் துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்பட்டுவரும் நிலையில், இந்த மாநிலப் பல்கலைக்கழகங்களின் தரவரிசை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அழகப்பா பல்கலைக்கழகம் 285வது இடத்தையும், ஐஐடி மெட்ராஸ் 56வது இடத்தையும் பெற்றுள்ளது.
சர்வதேச ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரிய மாணவர் விகிதம் உள்ளிட்ட பல அளவீடுகளில் பல்கலைக்கழகங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இப்பட்டியல் உருவாகியுள்ளது. “தேசிய அளவில் புகழ்பெற்ற பல நிறுவனங்களை விட மாநிலப் பல்கலைக்கழகங்களின் தரவரிசை மிகவும் சிறப்பாக உள்ளது. இருப்பினும், அடுத்த ஆண்டு இதே நிலை இருக்காது. துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்பட்டு வருவதால் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என பிற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூறி வருகின்றனர்.
