கடன் வாங்கிய கணவர் தலைமறைவு; இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்து தாக்குதல்: தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி கைது
தொடர்ந்து வட்டி கட்டி வந்த திம்மராயப்பாவால் சில மாதங்களாக வட்டி கட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது. வட்டி கட்டச் சொல்லி முனிகண்ணப்பா டார்ச்சர் செய்ததால், திம்மராயாப்பா மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு சொல்லாமல் ஊரை விட்டு ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சிரிஷா, கணவரை பல இடங்களில் தேடியுள்ளார். செல்போனிலும் தொடர்பு கொண்டும் கண்டுபிடிக்க முடியவில்லையாம். இதனால் சிரிஷா கூலி வேலைகளுக்கு சென்று தனது பிள்ளைகளை காப்பாற்றி வந்துள்ளார்.
திம்மராயப்பா மாயமானதை அறிந்த முனிகண்ணப்பா அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று சிரிஷாவிடம் பணம் கேட்டு ஆபாசமாக பேசியுள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பள்ளிக்கு சென்ற மகனை நேற்று மாலை சிரிஷா அழைத்துக்கொண்டு வீட்டுக்கு நடந்து சென்றார்.அப்போது அவ்வழியாக வந்த முனிகண்ணப்பாவும் அவரது மனைவியும், ‘பணத்தை திருப்பி தராமல் எங்கே செல்கிறாய்’ எனக்கேட்டு ஆபாசமாக பேசியுள்ளனர். மேலும் சிரிஷாவை திடீரென இழுத்துச்சென்று அங்குள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்து சரமாரி தாக்கினாராம். இதை பார்த்த அப்பகுதி மக்கள், அவரை தட்டிக்கேட்டுள்ளனர். மேலும் சிரிஷா தாக்கப்பட்டதை சிலர் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தார்களாம். அவர்களையும், முனிகண்ணப்பா சரமாரி தாக்கினாராம். இந்த சம்பவங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பொதுமக்கள் குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிரிஷாவை மீட்டனர். மேலும் வழக்கு பதிவு செய்து முனிகண்ணப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மனைவியை தேடி வருகின்றனர். கணவர் வாங்கிய கடனுக்காக அவரது மனைவியை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.