இயக்குநர் பிரபு சாலமன் இயக்கியுள்ள கும்கி 2 படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: இயக்குநர் பிரபு சாலமன் இயக்கியுள்ள கும்கி 2 படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி என்ற திரைப்படம் கடந்த 2012ம் ஆண்டு வெளியானது. 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது கும்கி-2 என்ற திரைப்படத்தை பிரபு சாலமன் தயாரித்து இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இன்று வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘கும்கி 2 படத்தை தயாரிக்க, பிரபு சாலமன் 2018ம் ஆண்டு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.
அப்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கும்கி 2 திரைப்படம் வெளியிடுவதற்கு முன்பு வட்டியுடன் கடன் தொகை ரூ.2.50 கோடி திருப்பி தருவதாக கூறியிருந்தார். ஆனால், அந்த தொகையை திருப்பி தராமல் படத்தை வெளியிட போவதாக அறிவித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியானால் எனக்கு வரவேண்டிய பணத்தை வசூலிக்க முடியாது. அதனால் படத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ், படத்தை வெளியிட டிசம்பர் 3ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த தடையை நீக்க கோரி பிரபு சாலமன் தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கவேண்டும் என்று இன்று காலையில் நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி விசாரணைக்கு எடுத்து கொண்டார். அப்போது, பிரபு சாலமன் படத்தின் இயக்குநர் மட்டுமே. அவர் வாங்கிய கடனுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது" என கும்கி 2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் பென் இந்தியா நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. இதையடுத்து திரைப்படத் தயாரிப்பாளர் கோரிக்கையை ஏற்று கும்கி 2 திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒரு கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த திரைப்பட இயக்குனர் பிரபு சாலமனுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.