Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கும்பகோணம் நீதிமன்றத்தில் பரபரப்பு கணவரை கைது செய்வதாக கூறி கர்ப்பிணி பெண் தர்ணா

கும்பகோணம் : கும்பகோணம் நீதிமன்ற வாயிலில் தனது கணவரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ய முயல்வதாக கூறி கர்ப்பிணி பெண் உள்ளிட்ட குடும்பத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, திருபுவனம் பேரூர், விராலிமலை பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (26). சென்னையில் டிரைவரராக வேலை பார்த்து வருகிறார். குருமூர்த்தி மீது கொலை, வெடிகுண்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் நேற்று காலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு சம்பந்தமாக ஆஜராக வந்திருந்தார். பின்னர் அதனை முடித்துவிட்டு நேற்று மாலை நீதிமன்றத்தில் நின்று கொண்டிருந்த குருமூர்த்தியை போலீசார் ஒரு வழக்கை காரணம் காட்டி சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய குருமூர்த்தி நீதிமன்றத்தின் உள்ளே திரும்பி சென்றுவிட்டார்.

பின்னர் குருமூர்த்தி, தனது குடும்பத்தினரிடம் போலீசார் தன்னை கைது செய்வதற்கு வந்துள்ளதாக தகவல் தெரிவித்தார். தகவலறிந்த கர்ப்பிணியான குருமூர்த்தியின் மனைவி சுவாதி (24), இவரது தங்கை சுபா (23), அத்தைகள் அன்னபூரணி (65) அஞ்சம்மாள் (47) மற்றும் அக்கா காயத்ரி ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்தனர். போலீசாரிடம் கைது செய்ய வந்தது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது குருமூர்த்தியின் கர்ப்பிணி மனைவி சுவாதி தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் ஊற்றிய வாட்டர் கேன் பாட்டிலை எடுத்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனைப்பார்த்த போலீசார் அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் இருந்த வாட்டர் கேன் பாட்டிலை பிடுங்கி வைத்தனர்.

தொடர்ந்து நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த குருமூர்த்தியின் குடும்பத்தினர் போலீசார் குருமூர்த்தியை வலுக்கட்டாயமாக கைது செய்ய முயல்வதாகவும், போலீசார் காரணமின்றி குருமூர்த்தியை கைது செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியும் கோஷமிட்டபடி திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த குடும்பத்தினரிடம் போலீசார் மற்றும் கும்பகோணம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதன்பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் இரவில் குருமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.